2019 முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்தலுக்கு 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
உலகம் முழுவதும் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் குறித்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகின்றனர். காற்று மாசு, பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் விளைவுகள் உள்ளிட்டவை மனிதகுலத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
பிளாஸ்டிக் பொருட்களில் தேங்கும் நீர் டெங்கு கொசுவை உற்பத்தி செய்து, மனிதர்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஆடு, மாடு மற்றும் மான் உள்ளிட்ட விலங்குகளுக்கு பிளாஸ்டிக்கால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் 110 விதியின்கீழ் இதனை அறிவித்தார். அப்போது:
பிளாஸ்டிக் பயன்பாட்டினால் ஏற்படும் சுகாதாரம், சுற்றச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் வல்லுநர் குழு ஜெயலலிதாவால் அமைக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வலலுநர் குழு ஆலோசனை வழங்கியது. வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள், பயன்பாட்டினை ஊக்குவிக்க வல்லுநர் குழு ஆலேசனை வழங்கியுள்ளது.
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நிலங்களில் தேங்கிவிடும்போது தண்ணீர் மாசடைகிறது. மழைநீர் பூமியில் கசிந்து நிலத்தடி நீரினை சென்றடையாமல் போவதால நிலத்தடி நீர்மட்டம் உயர்வதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளில் மழைநீர் தேங்கும்போது கொசு உற்பத்தியாகி அதன் மூலம் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் உருவாகின்றன.
கால்நடைகள் மற்றும் வனவிலங்குகளின் உயிரிழப்புக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் காரணமாகி விடுகின்றன. மனித உயிருக்கும், சுகாதாரத்துக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தடைக்கு பொதுமக்கள், வணிகர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், வருங்கால சந்ததியினருக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத சூழலை உருவாக்குவோம் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.