உச்சத்தைத் தொட்ட பெட்ரோல், டீசல் விலை … இன்னும் உயரும் என அதிர்ச்சி தகவல் !!
தமிழகத்தில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாயையும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது தங்கத்தின் விலை நாள்தோறும் நியமிக்கப்படுவதைப் போல பெட்ரோல், டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் நிர்ணயித்து வருகிறது.
பெட்ரோல்- டீசலுக்கு தினமும் விலை நிர்ணயிக்கிற முறையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமல்படுத்தின.
இந்த நிதி ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஏறத் தொடங்கியது. இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் நேரத்தில் 19 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.
ஆனால் தேர்தல் முடிந்ததும், 19 நாட்கள் விலை உயர்த்தப்படாததை எல்லாம் ஈடு செய்யும் வகையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் கணிசமாக உயர்த்த தொடங்கின.
அதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் முதல்முறையாக பெட்ரோல் விலை ரூ.80-ஐ தொட்டது. அதேபோன்று டீசலும் லிட்டருக்கு விலை ரூ.72-ஐ கடந்தது. இந்த விலை உயர்வு பின்னர் சற்று தணிந்தது. ஆனால் இப்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறுமுகத்தில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வந்து, வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.23 உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த 10 நாட்களாக டீசல் விலையும் ஏறுமுகமாகவே இருக்கிறது.
தமிழகத்தில் இன்று பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 82 ரூபாயையும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 75 ரூபாயையும் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது, இது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது..