துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சின்  சொந்த ஊரான  பெரியகுளம் ஒன்றிய 1 ஆவது வார்டில் ஓபிஎஸ் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் மண்ணைக் கவ்விய நிலையில் அமமுக வேட்பாளர் மருதையம்மாள் அதிரடியாக வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை பஞ்சாயத்து உட்பட்ட அழகர்சாமிபுரம், கரட்டூர் ஆகியவற்றை இணைத்து பெரியகுளம் ஒன்றியத்தின் 1வது வார்டாக அறிவிக்கப்பட்டது.

இந்த 1 ஆவது வார்டில் அ.ம.மு.க சார்பில் மருதையம்மாள் என்பரும், அ.தி.மு.க சார்பில் மாரியம்மாள் என்பவரும் போட்டியிட்டனர். இதில், மருதையம்மாள் 1,700 வாக்குகள் பெற்று அ.தி.மு.க வேட்பாளரை விட 143 வாக்குகள் அதிகம் பெற்று அதிரடியாக ஜெயித்தார்.

இதே போல் கீழவடகரையில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் செல்வராணி வெற்றிபெற்றுள்ளார். மொத்தம் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில், முதல் வார்டில், முதல் ஒன்றியக் கவுன்சிலராக அ.ம.மு.க பெண் வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரில் அ.ம.மு.க வேட்பாளர் வெற்றிபெற்றிருப்பது அதிமுக-விடம் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

மேலும் மருதையம்மாள் வெற்றியை அமமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளரை அவரது சொந்த ஊரிலேயே தோற்கடித்துவிட்டோம என அவர்கள் காலரை தூக்கிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.