எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சி... அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சி..!
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.பிரகாஷை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், “கொரோனா பாதிப்பிலிருந்து தமிழக மக்களை மீட்க அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இதை நான் இலவசமாகவே பார்க்கவில்லை. இது மக்களின் சுமைகளை குறைக்கும் அத்தியாவசிய திட்டங்கள் ஆகும். கடந்த காலங்களில் 3 அல்லது 4 அரசு பள்ளி மாணவர்கள்தான் மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இந்தாண்டு அதிமுக அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 500 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள்.
மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள வன்னியர் சமுதாயத்தினருக்கு அதிமுக அரசு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. அதுபோல பின்தங்கிய நிலையில் உள்ள எல்லா சமுதாயத்துக்கும் இடஒதுக்கீட்டை கொண்டு வருவோம். மு.க.ஸ்டாலின் சொல்வதெல்லாம் வெறும் வெற்று அறிக்கைதான். பிரசாந்த் கிஷோர் சொல்படி அவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
விவசாயியான எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டு ஆட்சி, எந்த பிரச்சினையும் இல்லாத ஆட்சியாகும். இது பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாகும். இந்த ஆட்சி மீண்டும் தொடர்ந்தால் பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.