People are being suffered by the AIADMK

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவின் தற்போதைய அரசியல் குழப்பங்களால் திமுகவுக்கு லாபம் என்று சொல்ல மாட்டேன் என்றார். ஆளும் கட்சியின் தற்போதைய நிலை, எதிர்கட்சிகளுக்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றும் அப்போது கூறினார்.

இந்த ஆட்சியில், ஒரு தொழிற்சாலை கூட தொடங்கப்படவில்லை. முதலீடும் பின் தங்கியுள்ளது என்றும் குற்றம்சாட்டினார். தமிழகம் முழுதும் டெங்கு பாதிப்பு வெகு வேகமாக பரவி வருவதாகவும் கூறினார்.

ஜெயலலிதாவிடம் திமுகவுக்கு கருத்து வேற்றுமை இருந்தது. ஆனால், அவருக்கு வாக்களித்த மக்கள் இப்போது ஏமாறுவதை எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை என்றார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, மரணம் பற்றியே இந்த அரசு பல பொய் தகவல்களை வெளியிட்டது. தேர்தலை முன்னிட்டு இரக்கம் தெரிவிக்கும் வகையில் இதனை நான் கூறவில்லை என்றார்.

ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர், அவரிடம் உண்மையாக இல்லை. அவரைச் சுற்றி இருந்த குடும்பமும் அவரிடம் உண்மையாக இல்லை. அதனால் மக்களுக்கு அதிமுக மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது என்று கூறினார்.

இந்த சூழலில், தேர்தல் நடந்தால் அது நிச்சயம் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பை தேடித் தரும் என்றும் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தால் என்றுமே ஆட்சிக்கு வராது என்பதுதான் இன்றைய நிலை என்றும் கனிமொழி எம்.பி. கூறினார்