திமுகவுக்கு ஆதரவு கொடுத்த "பாமக.." ராமதாஸின் புதிய கூட்டணிக் கணக்கு..?
சமீப காலமாக திமுகவிற்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்து வரும் பாமக, தற்போது நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விரைவில் திமுக கூட்டணியில் சேர்வதற்கு இது தொடக்கமா ? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து இருக்கிறது.
நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றம் செய்ய சிறப்பு சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, கவர்னர் எழுதிய கடிதத்தை சபையில் வாசித்தார். பின்னர், ஆளுநர் குறிப்பிட்டுள்ள கருத்துகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
ஆளுநர் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க ஒவ்வொரு கட்சிகளுக்கும் சபாநாயகர் வாய்ப்பு அளித்தார். அதன்படி பேசிய பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், ‘எந்த ஆளுநரும் சட்டங்களை திருப்பி அனுப்பவில்லை என தெரிவித்தார். சட்டங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல. புதிய நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற செயல்திட்டம் தேவை.நீட் விலக்கு மசோதாவுக்கு பாமக ஆதரவு தெரிவிக்கிறது.’ என்று கூறினார்.
கடந்த சமீப காலமாக திமுக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி வருகிறது பாமக.நடந்து முடிந்த தேர்தலில் தான் எதிர்பார்த்த அளவுக்கு பாமக வெற்றி முடியாமல் போனது. இந்நிலையில் தங்கள் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தொடர் தோல்வி காரணமாக அக்கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் அப்போது மேடை தோறும் தனது கட்சி நிர்வாகிகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை காண முடிந்தது.
அப்போது, அதிமுக பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மிகக் கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால் அக்கூட்டணியில் இடம் பெற்ற பாமகவோ தொடர்ந்து தமிழக அரசை விமர்சிப்பது தவிர்த்து வந்தது. எப்படியாவது திமுக கூட்டணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு காரணம் என்றும், அதனால்தான் பாமக அடக்கி வாசிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.
சமீபத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டினார் என்றும் கூறுகின்றனர்.கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்வர் சேலம் வருகை தந்தார். அதில் சேலத்திற்கும் தனக்கும் உள்ள தொடர்பை அவர் நெகிழ்ச்சியுற பேசினார். அதே நேரத்தில் அதில் பாமகவை சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் பாமக மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை மனம் திறந்து பாராட்டினர்.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாமக எல்எல்ஏ அருள், மாற்றான் தோட்டது மல்லிகைக்கும் மனம் இருக்கும் என்ற அண்ணாவின் பேச்சுக்கு ஏற்ப அனைத்து தொகுதி மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் செய்து வருகிறார். இந்த ஆட்சியில் துண்டு சீட்டில் மனு அளித்தாலும் அதனை நிறைவேற்றும் நிலை உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் அமைச்சரிடம் துண்டு சீட்டில் கொடுத்த மனுவிற்கு விடையாக முதியோர் உதவி தொகை கிடைத்துள்ளது என்று அவர் முதலமைச்சரையும் திமுக ஆட்சியையும் பாராட்டினார்.
இதேபோல மேட்டூர் தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் கூறுகையில், ‘கடந்த காலங்களில் உள்ள முதல்வர்களை விட மிக எளிமையான முதல்வராக தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை மிக சிறப்பாக நிறைவேற்றி சுமார் 40 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று உள்ளதாகவும், அனைத்து தொகுதிக்கும், எந்த கட்சிக்கும் பாகுபாடின்றியும் தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்று புகழாரம் சூட்டினர்.
பாமக சட்ட மன்ற உறுப்பினர்களின் இந்த பேச்சு அரசியல் தளத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சேலம் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் வலுவான தொகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்த இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை பாமக எம்எல்ஏக்கள் பாராட்டியிருப்பது அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்றே சொல்லலாம்.
அதிமுக கூட்டணியில் இருந்த போதே, திமுகவுக்கு ஆதரவு கொடுத்து அதிர்ச்சி கொடுத்த பாமக, தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி ஆதரவு கொடுத்து இருப்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பாமக தலைமை திமுக கூட்டணியில் சேர விரும்புவதாகவும், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தடுப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில் பாமகவின் இந்த திமுக ஆதரவு நிலைப்பாடு திமுக கூட்டணி கட்சிகளையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.