நாடாளுமன்ற தேர்தல்; பாஜக-அதிமுக கூட்டணி உறுதி... அடித்து சொல்லும் மத்திய அமைச்சர்!
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைக்கும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தனது ஆட்சியை தக்க வைக்கும். மேலும் பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என சென்னை விமான நிலையத்தில் ராம்தாஸ் அத்வாலே பேட்டியளித்துள்ளார்.
ஏழை - எளிய மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்வுக்கு பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் பாஜக அரசு அரவணைத்து செல்கிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. நாடு முழுவதும் 80 இடங்களை பிடிப்பது சிரமம் என்று கருத்து கணிப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தை பொறுத்த வரை ஏற்கனவே முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் மத்திய அரசுடன் இணக்கமான போக்கை கடைபிடித்தனர். தற்போதுள்ள அதிமுக அரசும் மத்தியில் உள்ள பாஜக அரசுடன் இணக்கமாக உள்ளது. அ.தி.மு.க-பா.ஜனதா கட்சிகள் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்றார்.