அதிமுக ஆட்சியை கலைக்க ஸ்டாலின் சதி…பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு…

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் ஜெயலலிதா வழியில் தற்போது நடைபெற்றறு வரும் கழக ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு திமுக செயல்பட்டு வருவதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப் போரவையில் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை வைத்தது. ஆனால் சபாநாயகர் தனபால் இதற்கு அனுமதி மறுத்ததால் அமளி ஏற்பட்டது, இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டுவிட்டு வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக, செய்தித் தொடர்பாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,சட்டசபை மற்றும் நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையது என தெரிவித்தார்.

ரகசிய வாக்கெடுப்பு என்பது பொதுமக்களுக்கு உண்மை நிலையை விளக்காது என்றும் அது ஜனநாயகத்திற்கு முரணானது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் இது கட்சி தாவல் சடை சட்டத்திற்கு எதிரானது. ரகசிய ஓட்டெடுப்பு நடந்தால் கொறடா உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. என்றும் பண்ருட்டி கூறினார்.

ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திமுக செயல்பட்டதால்தான் அவர்கள் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே திமுக செயல்பட்டு வருவதாக பண்ருட்டி குற்றம்சாட்டினார்