அரசு பங்களாவை காலி செய்த ஓ.பன்னீர்செல்வம்.. சிவாஜி வீடு அருகே குடியேறினார்..!
சென்னை கிரீன்வேஸ் சாலையில் 10 ஆண்டுகளாக அரசு பங்களாவில் வசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை காலி செய்துவிட்டு புதிய வீட்டுக்கு குடியேறினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் 10 ஆண்டுகளாக அரசு பங்களாவில் வசித்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அதனை காலி செய்துவிட்டு புதிய வீட்டுக்கு குடியேறினார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பங்களாக்களில் வசித்து வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு ஆட்சியில் இருந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் அரசு பங்களாவை அங்கிருந்த அமைச்சர்கள் காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனிடையே, 10 ஆண்டுகளாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் செவ்வந்தி இல்லத்தில் தங்கியிருந்த எடப்பாடி பழனிசாமி அங்கேயே தங்குவதற்கு அனுமதி கோரியிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட அரசு அரசு பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.
இந்நிலையில் நல்ல நாளான இன்றைய தினம் வாஸ்து நாளாகவும் உள்ளது. எனவே அரசு பங்களாவை காலி செய்துவிட்டு சென்னையில் புதுவீட்டுக்கு மாறியுள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ். சென்னை திநகர் கிருஷ்ணாசாலையில் நடிகர் சிவாஜி இல்லம் அருகே உள்ள வீட்டில் குடியேறியுள்ளார். தற்போது ஓபிஎஸ் இருந்த இல்லம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.