ஓபிஎஸ் கூறுவது விவசாயிகளுக்கு எதிரான கருத்து... அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!!
வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டம் 1987, பிரிவு 24(1)ன்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம் 1987ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். தமிழகத்தில் 27 விற்பனைக் குழுக்களின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு விற்பனைக் குழுவும் குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட விளைபொருட்களின் விற்பனையினை முறைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றன. ஒரு மாவட்டத்தில் விளையும் விளைபொருட்களை அடுத்த மாவட்டத்தில் விற்பனை செய்வதில் நடைமுறைச் சிக்கல் ஏற்படுகின்றன. இதனால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் அதிகளவில் விளைவிக்கக்கூடிய 40 வகையான வேளாண் விளைபொருட்களின் விற்பனையினை ஒரே சீரான முறையில் பரிவர்த்தனை செய்யும் வகையில், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 2008 ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுத்தார்.
2008 ஆம் ஆண்டில் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக, கடந்த 2021-22 ஆம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் 40 வேளாண் விளைபொருட்களுக்கும் ஒரே சீரான அறிவிக்கை கொண்டு வரப்படும் என அறிவித்து, ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்திலேயே, மாநிலம் முழுவதும் ஒரே சீரான அறிவிக்கை (Uniform Notification) 25.05.2022 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். அரசின் இந்த நடவடிக்கைகளினால், மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலையினை மாநிலத்தில் எந்தவொரு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலும் பெற இயலும். மேலும், வியாபாரிகளிடையே வேளாண் விளைபொருட்கள் வர்த்தகம் செய்வதில் ஆர்வமும் பங்களிப்பும் அதிகரிக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு அதிக விலை கிடைப்பது நிச்சயமாகிறது. தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டம் 1987 இன்படி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கும், ஒரு சதவீத சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படும் நடைமுறை ஆண்டாண்டு காலமாக 1936 ஆம் ஆண்டிலிருந்தே வசூலிக்கப்பட்டு வருகிறது. இது ஒன்றும் புதிதான நடைமுறை அல்ல என்பதை முன்னாள் முதல்வர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் சந்தை வரி வசூலிக்கப்படுகிறது. பஞ்சாபில் 8.5 சதவீதமும், அரியானாவில் 6.5 சதவீதமும், மகாராஷ்டிராவில் 6 சதவீதமும், ஆந்திரா, தெலுங்கானாவில் ஒரு சதவீதமும், சந்தை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மற்றும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் விளைபொருட்களுக்கு கூடுதல் செஸ் விதிக்கப்படுவதாக தவறான புரிதலின் அடிப்படையில் அறிக்கை ஒன்றினை ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த சரியான விபரங்களை தெரிவிக்க விரும்புகிறேன். அரசால் வெளியிடப்பட்டுள்ள தற்போதைய அறிக்கையானது நம் விவசாயிகளுக்கு தமிழகம் முழுமையும் நியாமான நல்ல விலை அவர்களுடைய விலை பொருட்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடப்பட்டதாகும். வேளாண் பெருங்குடி மக்களின் நலன் காக்க அதற்கென தனி நிதிநிலை அறிக்கை தயாரித்து சமர்ப்பித்து வரும் திமுக அரசு நம் மாநில விவசாயிகளை காப்பதையும் அவர்கள் வாழ்வு வளம் பெறவும் மட்டுமே திட்டங்களை நிறைவேற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் 29.05.2022 ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளாகும் என்று தெரிவித்துள்ளார்.