அதிமுக பக்கம் தொண்டர்கள்... டி,டி.வி அணியில் குண்டர்கள்... ஓ.பி.எஸ் அதிரடி விளக்கம்..!
அமமுக கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனோடு ஏன் யாரும் கூட்டணி சேரவில்லை என்பது பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அமமுக கட்சி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனோடு ஏன் யாரும் கூட்டணி சேரவில்லை என்பது பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த தினத்தையொட்டி அ.தி.மு.க. சார்பில் சென்னை வியாசர்பாடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அவருடைய பேச்சின் சாரம்சம்: “அதிமுக ஆட்சியை எப்படியும் கலைத்துவிட வேண்டும் என டிடிவி தினகரன் நினைக்கிறார். ஆனால், உண்மையான தொண்டர்கள் அதிமுக பக்கமே இருக்கிறார்கள்.
தினகரன் பக்கம் குண்டர்கள்தான் உள்ளனர். தனக்கு கீழ் எல்லோரையும் வைத்துகொண்டு அதிகாரம் முழுவதும் தன்னிடமே இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். 2008-ஆம் ஆண்டில் தினகரனை ஜெயலலிதா நீக்கியபோது என்னை அழைத்து, தினகரனுடன் எந்தப் பேச்சும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கூறினார்.
அந்தத் தினகரன் தற்போது ஸ்டாலினுடன் சேர்ந்து செயல்படுகிறார். தினகரனை யாருமே கூட்டணிக்கு அழைக்கவில்லை. யாராவது அழைப்பார்கள் எனப் பார்த்தார். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்ததால்தான் யாரும் சேரவில்லை. ஆனால், அதிமுக கூட்டணி இந்தியாவிலேயே இதுவரை இல்லாத மெகா கூட்டணியாக வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.