திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலுக்குப் பிறகு தினகரன் காலி..." சவால் விடும் ஓபிஎஸ்!
சொல்றதெல்லாம் பச்சைப்பொய், திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தல் முடிந்ததும் தினகரன் கட்சியின் கதை முடிந்துவிடும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
18-ம் நூற்றாண்டில் இந்தப் பகுதியை ஆட்சி செய்த மன்னரான பூலித்தேவன், ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மறுப்பு தெரிவித்து சுதந்திர தாகத்துக்கான முதல் கலகக்குரலை எழுப்பினார். அவரது பிறந்த தினத்தை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்கிற கோரிக்கையை ஏற்று அரசு சார்பாக விழா நடத்தப்படுகிறது.
இந்த விழாவானது நெற்கட்டும் செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவு இல்லத்தில் இன்று அவரது 303-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பூலித்தேவனின் வாரிசுகள் சார்பாகப் பால்குடம் ஊர்வலம் எடுத்து வரப்பட்டது. பின்னர், பூலித்தேவனின் சிலைக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பாகத் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் பூலித்தேவன் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஒ.எஸ்.மணியன், துரைகண்ணு, மணிகண்டன், பாஸ்கரன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
டிடிவி தினகரன் தற்போது பகல் கனவு காண்கிறார், அவர் பேசுவதில் ஒரு வாதத்தைக் கூட உண்மை இல்லை, பதற்றத்தில் உளறுகிறார். அவர் சொல்வது எல்லாமே பொய் என்று தமிழக மக்கள் விரைவில் அறிவார்கள். அதுவும் நடக்கவிருக்கும் திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத் தேர்தலுக்கு பிறகு தினகரன் அணி அரசியலில் இருந்தே காணாமல் போய்விடும், தினகரன் அரசியலிலிருந்து காணாமல் போய் விடுவார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் புதிய கூட்டணி ஏற்படும்" என்று தெரிவித்தார்.