panneerselvam advice to admk mla

அணிகள் இணைப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று உணர்ந்த பன்னீர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை சந்திப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதற்காக, தமது அணியின் முக்கிய தலைவர்களை எல்லாம் அழைத்து, இனி யாரும் சென்னையில் தங்க வேண்டாம், சொந்த ஊர் சென்று தொண்டர்களை சந்தித்து, கூட்டம் சேர்க்கும் பணிகளை கவனியுங்கள் என்று அனுப்பி வைத்தார்.

அதன்படி, அனைவரும் அவரவர் சொந்த மாவட்டத்திற்கு சென்று, பன்னீர் பங்கேற்கும் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், அவர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்த பன்னீர், நேற்று தமது வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார். அப்போது, எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ க்கள் பற்றி அதிகம் பேசியுள்ளார்.

மேலும், எடப்பாடி அணியில் இருக்கும் பல எம்.எல்.ஏ க்கள் தங்களுடைய எதிர்ப்பை காட்ட ஆரம்பித்துள்ளனர். யார், யார், அதிருப்தியில் இருக்கிறார்களோ, அவர்களை எல்லாம் சந்தித்து பேசி நம் பக்கம் திருப்பவேண்டும் என்று பன்னீர் கூறி இருக்கிறார்.

குறிப்பாக, அதிக கோபத்தில் இருக்கும் கொங்கு மண்டல எம்.எல்.ஏ க்களை, நம் பக்கம் கொண்டு வருவது நம் முதல் டார்கெட். அந்த வேலையை செம்மலையும், முனுசாமியும் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ க்களை, தங்கள் அணிக்கு இழுக்கும் அசைன்மென்டை மற்ற தலைவர்களுக்கு கொடுத்துள்ளார்.

எடப்பாடி அணியில் இருந்து, 10 எம்.எல்.ஏ க்களை நம் பக்கம் இழுத்து விட்டால், பிறகு நம் தயவு இல்லாமல் அவர்களால் ஆட்சி செய்ய முடியாத நிலை உருவாகி விடும் என்றும் சொல்லி இருக்கிறார் பன்னீர்.

அதற்கு, வெறுப்பாக இருக்கும் எம்.எல்.ஏ க்களை பொறுப்பாக கொண்டு சேர்ப்பது எங்கள் கடமை என்று அணித்தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

தயவு செய்து யாரும் போனில் பேசாதீர்கள், போன் எல்லாம் ஒட்டு கேட்கப்படுகிறது என்றும் எச்சரித்த பன்னீர், இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் நழுவ விட கூடாது என்றும் கூறி உற்சாகப்படுத்தி உள்ளார்.