அமைச்சர் குடியிருப்பை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டதால் 6ஆண்டுகளுக்கு மேலாக தான் வளர்த்து வந்த பசு மாடுகளை தெரிந்தவர்கள் எடுத்து செல்லும்படி ஓ.பி.எஸ் கூறியுள்ளார்.

தமிழக அமைச்சர்களில் தென் மாவட்டத்தை சேர்ந்த பாரம்பரிய விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். சொந்தமாக பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்து வந்த குடுபத்தில் இருந்து வந்தவர்.

அமைச்சராக பொறுப்பேற்றவுடன் முழுவதுமாக சென்னை வாசியாக மாறிவிட்ட ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அமைச்சர் இல்லத்தில், வசித்து வந்தார்.

மிகப்பெரிய தோட்டத்துடன கூடிய அமைச்சர் இல்லத்தில் சொந்தமாக 6 க்கும் மேற்பட்ட கறவை மாடுகளையும் ஒரு காளையையும் வளர்த்து வருகிறார்.

பல்வேறு பணிகள் இருந்தாலும் பசுமாடுகளையும் காளையையும் பராமரிக்க அவர் தயங்கியதே இல்லை. தனது வீட்டின் பின்புறம் பெரிய கொட்டகை அமைத்து பசுமாடுகளையும் காளையையும் பராமரித்து வந்தார்.

சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் பெரிய அளவில் நடந்தபோது போராட்ட குழுவினர் காளைகளை பற்றி ஓ.பி.எஸ்க்கு என்ன தெரியும் என்கிற மனநிலையில் அவரது இல்லத்துக்கு பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.

அப்போது, காளைகளை பற்றி அக்கறை இல்லை என்பது போல் பேசிய அவர்களை தனது வீட்டின் பின்புறம் அழைத்து சென்ற ஓ.பி.எஸ், நீங்கள் காளைகளை பற்றி பேசியும் எழுதியும் வருகிறீர்கள்,

நான் காளைகலுடனே வளர்ந்து வந்தவன், காளையையும் வளர்த்து வருகிறேன், ஜல்லிக்கட்டின் மீது அக்கறை இல்லவன் அல்ல நான், என்று கூறி தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை காண்பித்த ருசீகர சம்பவமும் அன்று நடந்தது.

அந்த அளவிற்கு தனது வீட்டிலேயே காளை ஒன்றையும் பசுக்களையும் வளர்த்து வரும் ஓ.பி.எஸ்ஸிற்கு வீட்டை காலி செய்யவேண்டும் என்று அதிகாரிகள் நெருக்கடி கொடுத்ததால் தனது மாடுகளை எங்கே வைத்து பராமரிப்பது என்பதில் பிரச்சனை இருப்பதாகவும் ஊருக்கு திருப்பி அனுப்ப இயலாது என்பதாலும் தன்னை பார்க்க வந்த ஆதரவாளர்கள் சிலரிடம் பசுமாடுகளை எடுத்து கொள்ள கூறிவிட்டாராம்.

ஆசையாக வளர்த்த காளை மாட்டை மட்டும் சொந்த ஊருக்கு அனுப்ப உள்ளார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.