Pandiarajan who retaliated Dinakaran

தற்போது நடைபெறுவதே பொற்கால ஆட்சிதான் என்றும், டிடிவி தினகரன் கூறுவது பொற்கால ஆட்சி அல்ல என்றும் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

தேவர் குரு பூஜையை முன்னிட்டு, தங்க கவசத்தை வாங்குவதற்காக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும், டிடிவி தினகரன் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தரப்பினரை, கடுமையாக விமர்சனம் செய்து பேட்டி அளித்திருந்தார்.

ஓ.பி.எஸ்.-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக டிடிவி தினகரன், தேவர் கவசத்தில் பன்னீர்செல்வம் தரப்பு செய்த அரசியலை நான் செய்ய விரும்பவில்லை என்றார். அடுத்த தேவர் ஜெயந்தி அன்று தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி இருக்கும் என்றும், வரும் பொங்கலுக்குள் தற்போதைய ஆட்சி கவிழும் என்றும் கூறியிருந்தார்.

டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் மாபா பாண்டியராஜன், தற்போது நடைபெறுவதே பொற்கால ஆட்சிதான் என்று கூறியுள்ளார்.

அமைச்சர் மாபா. பாண்டியராஜன், ஆவடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் அப்போது பேசிய அவர், டி.டி.வி. கூறுவது பொற்கால ஆட்சி அல்ல என்றார். தற்போது நடைபெறுவதுதான் பொற்கால ஆட்சி என்றும் கூறினார்.