முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாண்டியன் அறிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெரும்பாண்மையான இடத்தில் வெற்றி வாகை சூடியது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் பேச்சு வார்த்தை நடந்தது. அதில் தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்தது. இந்த நிலையில் இன்று மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனேயே போட்டிபோட்டு வெற்றி பெற்றது. இந்த நிகழ்வு திமுகவின் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு பலத்த கண்டனமும் எழுந்தது. இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒரு அறிக்கை விடுத்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதில், தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்.

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இந்த அறிவுறுத்தலின் பேரில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் பதவி விலக முன்வந்தனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரமன்ற துணைத் தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் திமுக கவுன்சிலர் பாண்டியன் போட்டியின்றி வெற்றி பெற்றிருந்தார். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாண்டியன் அறிவித்துள்ளார்.