தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற போலியாக வேலைத் தூக்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.  

பழநியில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. தைப்பூசம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பழநிக்கு வருகை புரிந்தனர். பழநியில் பெரியநாயகியம்மன் கோயிலிலிருந்து மூவரும் காவடி எடுத்து பநினி அடிவாரம் வரை வந்தனர். பின்னர் மலைக்கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். அப்போது மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred


அப்போது அவர் கூறுகையில், “கந்தசஷ்டியை இழிவுபடுத்தியவர்களுக்கு வேல் யாத்திரை நடத்தி தகுந்த பாடம் புகட்டினோம். இந்து மதத்தை அவமதித்து வந்தவர்களை தை மாதத்தில் கிருத்திகை அன்றி வேல் தூக்க வைத்திருக்கிறார் பழநி முருகன். பாஜகவின் கோரிக்கையை ஏற்று தைப்பூசத்துக்கு பொது விடுமுறை அறிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கிறோம். கடவுளே இல்லை என்று சொன்ன மு.க. ஸ்டாலின் இன்று இந்துக்களுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று சொல்கிறார். மு.க. ஸ்டாலின் தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற போலியாக வேலைத் தூக்கியிருந்தாலும், அவருக்கு முருகன் நல்ல ஆயுளைக் கொடுக்க வேண்டும்.” என்று எல்.முருகன் தெரிவித்தார்.