370 ஐ நீக்கியது சரியா ? உங்களால் காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த முடியுமா மிஸ்டர் மோடி ! சவால் விட்ட பாகிஸ்தான் !!
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த முடியுமா என பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ஆவது பிரிவு சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத் தொடர்ந்து காஷ்மீர் 2 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு யூளியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதற்கு காஷ்மீரில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, அந்த மாநிலத்தை ஜம்மு–காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான், இதனை சர்வதேச பிரச்சினையாக்க முயற்சி செய்ததற்கு தோல்வியே மிஞ்சியது.
இந்நிலையில் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை மக்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள காஷ்மீரில் பொதுவாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அமைச்சர் முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்து, அரசியல் தலைவர்களை விடுதலை செய்து அங்கு பொதுமக்களிடம் பொது வாக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி தயாரா? என முகமது குரோஷி சவால் விடுத்துள்ளார்
ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இனி பேச்சுவார்த்தையென்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியதாகதான் இருக்கும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதனை கண்டிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விவகாரங்கள் அமைச்சர் முகமது குரோஷி குறிப்பிட்டுள்ளார்.