Over 100 hours tested
ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓ விவேக், கிருஷ்ணபிரியா வீடுகளில் 100 மணி நேரத்துக்கும் மேலாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில் வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சசிகலா, தினகரன் தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை, கோடநாடு, பெங்களூர், ஐதராபாத், டெல்லி, புதுவை உள்ளிட்ட 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9 ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா, டிடிவி தினகரன், திவாகரன், நடராஜன், இளவரசியின் மகன் விவேக், கிருஷ்ணப்பிரியா மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோரின் நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று 4-வது நாளாக இந்த சோதனை நீடித்த நிலையில், இன்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை, ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்ஜிஆர் நாளிதழ் அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை, கோடநாடு எஸ்டேட் ஆகியவற்றில் இன்றும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிலைய நிர்வாகியும், இளவரசியின் மகனுமான விவேக்-ன் வீடு, மகள் கிருஷ்ணப்பிரியா வீடுகளில் இன்றும் தொடர் சோதனை நடந்து வருகிறது.
கடந்த 4 நாட்களாக நடைபெற்று வந்த சோதனையின்போது ஏராளமான சொத்து ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும், அந்த ஆவணங்களை சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்துக்கு எடுத்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஆவணங்களை மதிப்பிடும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. அதுமட்டுமல்லாது கைப்பற்றப்பட்ட தங்கம், வைர நகைகள் உள்ளிட்டவைகள் மதிப்பிடும் பணியும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனையில் மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்று 5-வது நாளாக தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா தொலைக்காட்சி, நமது எம்ஜிஆர் உள்ளிட்ட அலுவலகங்கள் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறையின் சோதனை 100 மணி நேரங்களைக் கடந்து நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக இவ்வளவு மணி நேரம் சோதனை நடத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
கொடநாடு எஸ்டேட்டில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எஸ்டேட்டின் மேலாளர் நடராஜனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறையின் தொடர் சோதனையால் மன்னார்குடி குடும்பம் பெரும் கலக்கத்தில் உள்ளது.
