ops tean went to delhi
இரட்டை இலை சின்னம் யாருக்கு? நஜீம் ஜைதியை டெல்லியில் இன்று சந்திக்கிறார் ஓபிஎஸ்…

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் முதலமைச்சராக ஓபிஎஸ்ம் பொறுப்பேற்றனர். இதையடுத்து சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயற்சி மேற்கொண்டதால் அவருக்கு எதிராக ஒ.பி.எஸ் போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில் சில முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், அதிமுக அடிமட்ட தொண்டர்கள், இளைஞர்கள், என பல்வேறு தரப்பினரும் ஒ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர், ஒ.பி.எஸ் தரப்பினருக்கும், சசிகலா தரப்பினருக்கும் இடையே எம்.எல்.ஏக்களை இழுப்பதில் போட்டி நிலவியது. அதில் பெரும்பான்மையை நிரூபித்து எடப்பாடிபழனிசாமி தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது சசிகலா தரப்பு.
இதனிடையே, சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என ஒ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். இதற்கு சசிகலா பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி ஒ.பி.எஸ் தரப்பை பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைதொடர்ந்து நேற்று ஒ.பி.எஸ் அணியினர் மைத்ரேயன் எம்.பி. தலைமையில் 61 பக்கம் கொண்ட பதில் மனுவை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர்.

இதையடுத்து ஓபிஎஸ் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து இன்று நண்பகல் 12 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை ஓபிஎஸ் சந்திக்க உள்ளார். இதற்காக இன்று அதிகாலை ஓபிஎஸ் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

அவருடன் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பாண்டியராஜன், செம்மலை, கே.பி.முனுசாமி முன்னாள் எம்.பி.மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றனர். இன்று நண்பகலில் அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்கின்றனர்.
ஆர்.கே,நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஓபிஎஸ் அணிக்கா? அல்லது சசிகலா அணிக்கா? விரைவில் தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.
