"சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து கூடுதல் மனு" - ஓ.பி.எஸ் அணி தாக்கல்!!
நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் டிடிவி தினகரன் நீக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில், துணைப் பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டது கட்சியின் சட்ட விரோதம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு, டிடிவி அணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டிடிவி தினகரன் ஆதரவாளர் எம்.எல்ஏ. வெற்றிவேல், பிரமாணப் பத்திரத்தில் திருத்தம் செய்வதற்காக தலைமைக் கழக நிர்வாகிகளிடம் கையெழுத்து பெற்றதாக தெரிவதாகவும், அவ்வாறு செய்தாலும் சசிகலா, தினகரனை நீக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியினரோ, எடப்பாடி அணி பாதி தூரம் கடந்துள்ளது என்றும் இன்னும் பாதி தூரம் கடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இந்த நிலையில், ஓ.பி.எஸ். அணியினர், தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். சசிகலா பொது செயலாளராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பி.எஸ். அணி கூடுதலாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஓ.பி.எஸ். அணியினர் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஓ.பி.எஸ். அணி சார்பில் மனோஜ் பாண்டியன், தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அவருடன், கே.பி. முனுசாமி, மாபா பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.