OPS Team of the AIADMK used mock coffin of Jayalalithaa to seek votes in the R K Nagar

சசிகலா எதிர்ப்பு என்கிற ஒரே விஷயம்தான், பன்னீர்செல்வத்தை இன்று பெரும்பாலான அதிமுக தொண்டர்களும், பொது மக்களும் ஏற்றுக்கொள்ள காரணமாக இருந்தது.

இதை தவிர, அவர் தரப்பில் அப்படி என்ன அரிதான கொள்கையோ, கோட்பாடோ இருக்கிறது? என்று அறிவு ஜீவிகள் கேள்வி எழுப்புவதுண்டு.

அதை மெய்ப்பிப்பது போல, ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மத்தை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்ற ஒற்றை வாசகம்தான், ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் அணியின் தேர்தல் முழக்கமாக இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் என்பது, ஜெயலலிதாவின் மரணத்திற்கான தேர்தல் அல்ல. மரணத்திற்கு நீதி கேட்பதற்கான தேர்தல் என்றே அந்த அணி தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

அவர்களின் அந்த அணுகுமுறையை ஒரு , தேர்தல் பிரச்சார வியூகமாக எடுத்துக் கொள்ளலாம். அதில் தவறு இல்லை.

ஆனால், ஜெயலலிதா உடல் சவப்பெட்டியில் இருப்பது போல ஒரு மாதிரி சவப்பெட்டியுடன், வாக்கு சேகரிக்கலாமா?

ஆர்.கே.நகரில் அதுபோல, மாபா பாண்டியராஜன் வாக்கு சேகரித்த சம்பவம், சமூகத்தின் பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் உருவாக காரணமாக அமைந்துள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்தை சொல்லி ஆதாயம் தேடும் ஓ.பி.எஸ் அணி, இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா? என்று பலரும் கேட்க தொடங்கி விட்டனர்.

சசிகலாவை எதிர்த்து நின்றதன் காரணமாக, தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் ஒரு தலைவருக்குரிய அந்தஸ்தை பெற்று வளர்ந்து வரும் பன்னீர்செல்வம், கேவலம் ஒட்டு வாங்குவதற்காக, இப்படிப்பட்ட, அநாகரிகமான வேலைகளை அனுமதிக்கலாமா? என்றும் மக்கள் கூறுகின்றனர்.

ஜெயலலிதாவுக்கு, அவர்கள் காட்டும் விசுவாசம் இதுதானா? இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து போக வேண்டுமா? என்றெல்லாம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த மாதிரியான மலிவான தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், நாங்களும், ஓட்டுக்காக எதையும் செய்யும் அரசியல்வாதிகள்தான் என்பதை ஓ.பி.எஸ் தரப்பினரும் நிரூபித்துள்ளனர்.