ஒ.பி.எஸ் அணி எம்.எல்.ஏக்கள் தினகரனிடம் வர தயார்...!!! – குண்டு தூக்கி போடும் ஏ.கே.போஸ்...
எடப்பாடி தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏக்கள் 30 பேர் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஒ.பி.எஸ் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்புக்கு வர தயாராக உள்ளதாக அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ போஸ் தெரிவித்துள்ளார்.
இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த அதிமுக, தற்போது மூன்றாக உடைந்துள்ளது. டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்து அறிவித்தது. மேலும் தங்கள் தரப்பில் இருந்து தினகரனை யாரும் சந்திக்க மாட்டோம் என தெரிவித்தது.
இதையடுத்து தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. டி.டி.வி.தினகரனை எடப்பாடி தரப்பில் இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம் உள்ளிட்ட 27 எம்எல்ஏக்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் தினகரனை சந்தித்து இன்று ஆதரவு தெரிவித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆட்சியை எடப்பாடி வழிநடத்தட்டும், கட்சியை தினகரன் வழிநடத்தட்டும். இதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
மேலும் ஒ.பி.எஸ் தரப்பில் இருக்கும் எம்.எல்.ஏக்களும் தங்கள் தரப்புக்கு வர தயாராக உள்ளதாகவும், தமிழகத்தில் ஆட்சி கவிழாது எனவும் அதிமுக அம்மா அணி எம்.எல்.ஏ போஸ் தெரிவித்துள்ளார்.