முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவருவதை கருத்தில் கொண்டு முதல்வரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சராக ஜெயலலிதாவே தொடர்ந்து நீடிப்பார் என ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப் 22 அன்று அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 19 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா மேலும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. 

இந்நிலையில் அரசு நிர்வாகம் சீராக நடக்க புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக தலைவர் கருணாநிதி செயல்படாத அரசு என்று கூறி முதல்வரை மாற்ற வேண்டும், துணை முதல்வர் நியமிக்க வேண்டும் என்று கேட்டிருந்தார்.

முக.ஸ்டாலின், சுப்ரமணியம் சுவாமி போன்றோர் இதே கோரிக்கையை வைத்தனர். இவர்கள் எல்லாம் ஒரு படி மேலே போய் ஆளுநர் ஆட்சி வரவேண்டும் என்ற

கோரிக்கையையும் வைத்தனர்.

துணை முதல்வர், புதிய முதல்வர் கோரிக்கை தேவையற்றது என்று இவர்கள் தவிர அனைத்து எதிர்கட்சித்தலைவர்களும் கூறிவந்தனர்.. இந்நிலையில் அரசு நிர்வாகம் தொய்வின்றி நடக்க முதல்வர் வகித்து வந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கி உள்ளதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராகவே நீடிப்பார்.இலாகா இல்லாத முதலமைச்சராக ஜெயலலிதா நீடிப்பார். ஜெயலலிதா வகித்து வந்த பொது நிர்வாகம், காவல் , உள்துறை இனி நிதியமைச்சரின் கீழ் வருகிறது . அமைச்சரவை கூட்டத்துக்கும் ஓபிஎஸ் தலைமை வகிப்பார்.

முதல்வர் நலமடைந்து வரும் வரையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் பரிந்துரையின் பேரில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.