ops statement
தமிழக விவசாயிகளின் கோரிக்கையை எப்போதான் கண்டுகொள்வீர்கள்…மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கேள்வி?
வர்தா புயல் நிவாரண நிதியை முழுமையாக வழங்க வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், வர்தா புயலால் ஏற்பட்ட பெரும் சேதத்தை தவிர்ப்பதற்கு அதிமுக அரசின் சார்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், புயலுக்குப்பின் மேற்கொண்ட விரைவான நிவாரண நடவடிக்கைகளும் பொதுமக்கள் பாராட்டும்படியாக அமைந்திருந்நதாக தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, வர்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் எடுத்துக்கூறி, வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரண நிதியாக 22 ஆயிரத்து 573 கோடி ரூபாயும், வறட்சி நிவாரண நிதியாக 39 ஆயிரத்து 565 கோடி ரூபாயும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போது, மத்திய அரசு வார்தா புயல் நிவாரண நிதியாக 266 கோடி ரூபாயும், வறட்சி நிவாரண நிதியாக 1,748.28 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ள ஓபிஎஸ், இந்த நிவாரணம் போதுமானதாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக அரசு கோரிய நிதியை முழுமையாக வழங்கவேண்டி, மத்திய அரசை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லியில் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
மத்திய அரசு தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும், போராட்டத்தினையும் முடிவுக்கு கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
