புதிய அரசியல் அவதாரங்கள் எல்லாம் புஸ்வாணம் ஆகும்… ரஜினி, கமலை வெளுத்து வாங்கிய ஓபிஎஸ்….
அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண,வண்ண பலுன்கள் பறக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த புதிய அரசியல் அவதாரங்கள் எல்லாம் புஸ்வானம் ஆகும் என்றும் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 7 அடி உயரமுள்ள அவரது வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
இவ்விழாவில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
'நமது புரட்சித் தலைவி அம்மா' என்ற தினசரி நாளிதழையும் முதல்வரும், துணை முதல்வரும் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அதிமுக ஆட்சியை ஜெயலலிதாவும், கட்சியை தொண்டர்களும் நடத்தி வருவதாக தெரிவித்தார்.
கமல், ரஜினி ஆகியோர் அரசியலில் களமிறங்கியுள்ளது குறித்து பேசிய ஓபிஎஸ், அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண வண்ண பலுன்கள் பறக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த புதிய அரசியல் அவதாரம் எல்லாம் புஸ்வாணம் ஆகி விடும் எனவும் தெரிவித்தார்.
அரிதாரம் பூசிய சிலர் மக்களின் ரட்சகர்கள்போல் பேசி வருகின்றனர் என்றும், ஜெயலலிதா இல்லாதததை பயன்படுத்தி இவர்கள் அரசியல் செய்ய நினைப்பது எடுபடாது என்றும் தெரிவித்தார்.
நல்லவர்கள் போல் அவர்கள் போடும் வேஷம் கலைந்துவிடும் என்றும், அரிதாரம் பூசிய அந்த வண்ண, வண்ண பலூன்கள் வெடித்துச் சிதறிவிடும் என்றும் ஓபிஎஸ் கடுமையாக பேசினார்.