கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார். 

கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில், சுயம்பு சனீஸ்வரபகவான் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வளாகத்திலேயே காசி ஶ்ரீ அன்னபூரணி கோயிலும் உள்ளது. நேற்று முன் தினம் இந்தகோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோயிலுக்கு உதவி புரிந்தவர்களின் பெயர்களில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன்கள் ஓ.பி.ஜெயபிரதீப் குமார், ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பெயர் மட்டும் இடம் பெற்றிருந்தால் பிரச்னை இல்லை.

 ஆனால் ரவீந்திரநாத் பெயருக்கு முன்னால் இருந்த தேனி மக்களவை உறுப்பினர் பதவி எனப் பொறிக்கப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஏற்கனவே 15 தினங்களுக்கு முன்பு கோயம்புத்தூரிலிருந்து, திருவள்ளூரில் இருந்தும் 50 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் இன்னும் தேர்தல் முடிவுகள் வெளியாகவில்லை. அதற்குள் தேனி எம்பி ரவீந்திரநாத் என கோயில் நிர்வாகம் பெயர் பொறிக்க எப்படி அனுமதித்தது என கேள்வி எழுந்து பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். இதனையடுத்து அந்த பெயர் தாங்கிய கல்வெட்டின் மீது மற்றொரு கல்வெட்டை பொறுத்தி ரவீந்திரநாத் பெயரை மறைத்தனர். 

இந்நிலையில் தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளரும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ’’குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவு வெளிவராத நிலையில் எம்.பி. என கல்வெட்டில் பொறிக்கப்பட்டது தவறானது. கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என ரவீந்திரநாத் கூறியுள்ளார்.