ஸ்டாலினுக்கு எதிராக களமிறங்கும் ஓபிஎஸ் மகன்?... அதிமுக அலுவலகத்தில் குவிந்த விருப்ப மனு...!
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பெயரில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு தாக்கல், தேர்தல் அறிக்கை, பிரச்சாரம் என அரசியல் கட்சிகள் படு பிசியாக சுழன்று வருகின்றன. திமுகவில் விருப்ப மனு தாக்கல் முடிந்து, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத் தும் பணி நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான நாள் இன்றுடன் நிறைவடைகிறது. நாளை ஒரே நாளில் விருப்ப மனு தாக்கல் செய்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேர்காணல் நடத்த உள்ளனர். இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் பெயரில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். கம்பம், வில்லிவாக்கம், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிகளில் ஜெயபிரதீப் போட்டியிட வேண்டுமென விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 3வது முறையாக போட்டியிட உள்ள கொளத்தூர் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதற்காகவே அதிக அளவிலான தொண்டர்கள் அந்த தொகுதியை குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.