திருச்சியில் மாநாடு.! தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்- இபிஎஸ்க்கு எதிராக களத்தில் இறங்க தேதி குறித்த ஓபிஎஸ்
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட தயார் என நாங்கள் நீதிமன்றத்தில் கூறவில்லை..உச்சபட்ச பதவிக்கு தேர்தல் வைத்தால் போட்டியிட தயார் என்றே கூறியதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் மாநாடு
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஏப்ரல் 24ம் தேதி திருச்சியில் தங்களது அணி சார்பில் மாநாடு நடத்த உள்ளதாகவும் எம்ஜிஆர் , ஜெயலலிதா பிறந்தநாள் மற்றும் அதிமுக பொன்விழாவை குறிப்பிடும் வகையில் அந்த மாநாட்டை முப்பெரும் விழாவாக நடத்த உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனது ஆதரவாளர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். தேர்தல் ஆணையத்தில் இன்று வரை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் , இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளன. தமிழகம் வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் நாளை சந்திப்பேன் என தெரிவித்தவர், நாளை தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க இதுவரை நேரம் கிடைக்கவில்லை என கூறினார்.
பொதுச்செயலாளர் தேர்தல்
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநர் கூறியுள்ள விசயங்கள் தொடர்பாக நான் கருத்து கூற விரும்பவில்லையெனவும் தெரிவித்தார். அதிமுக விதிகளின்படி 5 ஆண்டுக்கு ஒருமுறை நிர்வாகப் பொறுப்புக்கு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவர். பொதுச்செயலாளரை அடிப்படை தொண்டர்களே தேர்வு செய்வர் ,தொண்டர்களுக்கு எம்ஜிஆர் கொடுத்த உச்சபட்ச உரிமை , மரியாதை அது. ஜெயலலிதா இருக்கும்போது பொதுச்செயலாளர் தேர்தல் முடிந்த பிறகு அதுகுறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்புவோம்.ஆனால் தற்போது அவர்களாகவே பொதுச்செயலாளரை அறிவிப்பு செய்து கொண்டுள்ளனர். இந்த உலகம் உள்ளவரை அதிமுக இருக்கும் , அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவே இருப்பார் என கூறினார்.
இபிஎஸ்யை மக்கள் ஏற்கவில்லை
சர்வாதிகார அடிப்படையில் அவர்கள் பொதுச்செயலாளர் என அறிவிப்பு செய்து கொண்டுள்ளனர். மாவட்ட செயலாளர்களை விலைக்கு வாங்கினால்தான் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடும் சூழல் உள்ளது .நீதிமன்றத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறவில்லை , தலைவர் , ஒருங்கிணைப்பாளர் போல ஏதேனும் ஒரு உச்சபட்ச பதவிக்கு தேர்தல் வைத்தால் அதில் போட்டியிட தயார் என்றுதான் கூறினோம். ஜெயலலிதா தான் நிரந்தர பொதுச்செயலாளர் என தெரிவித்தவர், நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவின் மூலம் மக்கள் இபிஎஸ் அணியை ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கட்சியை கைப்பற்றி விட்டோம் என்ற அகம்பாவத்துடன் நடத்து கொண்டால் தொடர்ந்து தோல்வியைதான் இபிஎஸ் சந்திப்பர் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
ஆளுநர் பதவி, அவசியமில்லாத பதவி.! ஆர்.என்.ரவி பேச்சுக்கு எதிராக போராட்டத்திற்கு தேதி குறித்த திமுக கூட்டணி