ஈரோட்டை இரண்டாகப் பிரித்த ஓபிஎஸ் - ஈபிஎஸ்... கொங்குப் பகுதியில் அதிமுக திடீர் முடிவு..!
அதிமுக நிர்வாக வசதிக்காக ஈரோடு புறநகர் மாவட்டம் ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ஓபிஎஸ் - இபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக நிர்வாக வசதியை கருத்தில்கொண்டு ஈரோடு புறநகர் மாவட்டம் என செயல்பட்டு வரும் மாவட்ட கழக அமைப்பு இன்று முதல் கழக அமைப்பு ரீதியாக ஈரோடு புறநகர் கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு கீழ்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி செயல்படும்.
ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டத்தில் பவானி(104), பெருந்துறை (103) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம் (106), அந்தியூர் (105), பவானிசாகர் (107) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளும் இருக்கும். இதன் அடிப்படையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக செங்கோட்டையன் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளராக கே.சி.கருப்பணன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். கழக அமைப்பு ரீதியாகத் தற்போது பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்குட்பட்ட அனைத்து நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஈரோடு புறநகர் கிழக்கு, ஈரோடு புறநகர் மேற்கு ஆகிய மாவட்டங்களுக்கு, மாவட்ட அளவில் திருத்தி அமைக்கப்பட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் வரை தற்போதுள்ள நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளில் தொடர்ந்து செயலாற்றுங்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் ஓபிஎஸ்-இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.