"ஜெயலலிதாவின் வீடு எங்களுக்கு கோவில்.. அதை நினைவில்லமாக ஆக்க வேண்டும்" - உருகிய ஓபிஎஸ்
இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவிலேயே அச்சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்ககுக்கு ஒதுக்கும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.
சென்னை கிரீன்வேய்ஸ் சாலையில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுகவில் தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம்தான் உள்ளனர் என தெரிவித்தார். அது விரைவில் நிரூபணமாகும் எனவும் அவர் கூறினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் யாருக்கு ஆதரவு அளிப்போம் என்பது குறித்து அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார்.
இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கான தீர்ப்பு விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், நிச்சயம் இரட்டை இலை சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படும் என ஓபிஎஸ் உறுதியாக தெரிவித்தார்.
வரும் 14 ஆம் தேதி காலை 9 மணிக்கு தங்கள் அணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாகவும், அப்போது சட்டமன்றத்தில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து முடிவு செய்வோம் எனவும் தெரிவித்தார்.
போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லம் தங்களுக்கு கோவில் என்றும், அதை நினைவில்லமாக ஆக்க வேண்டும் என்றும் தெரிவித்த ஓபிஎஸ் சட்டப்படி அப்பிரச்சனையில் என்ன தீர்ப்பு வருகிறதோ அதை ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார்.
போயஸ் இல்லத்தில் செய்தியாளர்கள் தாக்கப்பட்டதற்கு ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.