“ஸ்டாலினை கைது செய்திருக்க கூடாது” – ஓபிஎஸ் கடும் கண்டனம்!!
போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளது. ஸ்டாலினை கைது செய்தது தேவையற்றது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ராமேஸ்வரத்துக்கு வந்த பிரதமர் மோடியிடம் எங்கள் அணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
கச்சராயன் குட்டையை பார்வையிடுவதற்காகவும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் சேலத்தில் நடைபெற இருந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்ற ஸ்டாலினை போலீசார் கைது செய்துள்ளனர்.
மக்கள் பிரச்சினைக்காக போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. இது போன்ற சம்பவங்களை தமிழக அரசு முறையாக கையாண்டிருக்க வேண்டும். ஸ்டாலின் கைது நடவடிக்கை தேவையற்றது.
உள்ளாட்சி தேர்தலை மற்ற கட்சியினரை போல் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். அந்த தேர்தலில் எங்கள் அணி பெரும்பான்மையை நிரூபிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.