நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒரு மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொறுப்புகளை ஏற்றப்பின் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தமிழக (பொறுப்பு) ஆளுநர் அலுவலகத்தில் இருந்து, செய்தி குறிப்பு ஒன்று கடந்த 11 ஆம் தேதி அன்று வெளியாகியது. அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த அனைத்து அரசு துறைகளும், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்ச்ர ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்பட்டிருநத்து.

இந்த நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை சுமார் 9.30 மணியளவில் கூடியது. நிதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
பருவமழை காலம் விரைவில் தொடங்க உள்ளதை அடுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. காவிரி விவகாரம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகாரிகளை நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
