Ops and me are brothers...thambidurai

அதிமுகவின் இரு பிரிவைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம் என்றும் நானும் சகோதரர் ஓபிஎஸ்ம் அண்ணன், தம்பிகள் என்றும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைந்த பிறகு அவரின் உடன்பிறவா சகோதரி சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார். அதிமுக தொண்டர்கள் ஜெயலலிதா இறந்த துக்கத்திலிருந்து மீளாத நிலையில் இருந்தனர்.

அப்போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை ஒரு பொறியை பற்ற வைத்தார். அது அதிமுகவின் பொதுச் செயலாளரே முதலமைச்சராகவும் இருக்க வேண்டும் என்று.

இதை தம்பிதுரை ஒரு கடிதம் மூலம் சசிகலாவிடம் , தனது ஆதரவாளர்கள் புடை சூழ போயஸ் தோட்ட இல்லத்திற்கு சென்று சமர்ப்பித்தார், இப்படி முதன்முதலாக அதிமுகவுக்குள் கலகத்தை தொடங்கி வைத்தவர் இந்த தம்பிதுரைதான்.

இதனையடுத்து ஓபிஎஸ் பதவி பறிக்கப்பட்டது. சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க நாள் குறிக்கப்பட்டது. அதற்குள் ஓபிஎஸ் தனியாக சென்று ஜெயலலிதா சமாதியில் தனது கலகத்தைத் தொடங்கினார்.

இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எடஙபபாடி பழனிசாமி முதலமைச்சரானார்.

இப்படி பல குழப்பங்களிடையே தற்போது அதிமுக மூன்றாக பிரிந்து கிடக்கின்றன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் ராம்நாத் கோவிந்த், இன்று மனுத்தாக்கல் செய்தார். இவருக்கு அதிமுகவின் மூன்று பிரிவுகளும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றன. டெல்லியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள், இன்னாள் முதலமைச்சர்கள் பங்கேற்றனர். தம்பிதுரையும் பங்கேற்றார்

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை நாங்கள் ஒற்றுமையாக தான் உள்ளோம் என்றும் , பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.வில் உள்ள அணியினர் அனைவரும் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

அதிமுகவில் நாங்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளோம் என்றும் . டெல்லியி்ல் ஓபிஎஸ்ஐ சந்தித்துப் பேசியதாகவும் தெரிவித்த தம்பிதுரை நாங்கள் இருவரும் அண்ணன் தம்பிகள் என கூறினார்.

எங்கள் பிரச்சனைகளை விரைவில் இரு தரப்பும் பேசி தீர்ப்போம் என்றும்தம்பிதுரை தெரிவித்தார்.