When it comes to their position on the team made these travelers coming opies Chandragupta Chanakya eating hot appam

ஓபிஎஸ் வீட்டு பக்கம் நடையை கட்டினோம். வயசான் மூணு கரை வேட்டி பெரியவர் தம்பி ஓபிஎஸ் அண்ணன் வீடு எங்கே என்று கேட்டார். வழியை காட்டிவிட்டு , பெருசு அவரு எங்க தாக்கு பிடிக்க போகிறார், கட்சியும் , ஆட்சியும் அவங்க கிட்ட இருக்கு இவருகிட்ட உங்களை போல தலை காய்ஞ்சவங்கத்தான் இருக்கீங்க என்றேன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்படி சொல்லாதேப்பா , உனக்கு ஆப்பக்கார கிழவியும் சாணக்கியனும் கதை தெரியுமா? அப்படின்னு பெரியவர் என்னை கேட்டார். தெரியாது. அதுக்கும் ஓபிஎஸ்சுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன். 

இருக்கு உனக்கு கேட்க டைம் இருக்கா என்றார் பெரியவர். அதுக்கென்ன சொல்லுங்கள் என்று அவரருகில் உட்கார்ந்தேன். 

ஓபிஎஸ் அணியினர் தங்கள் நிலைப்பாட்டை வலுவாக்கி வருவதை கவனிக்கும் போது சந்திரகுப்தனும் , சாணக்கியனும் சூடான ஆப்பம் சாப்பிட்ட கதைதான் உதாரணமாக சொல்லலாம் என்றார்.

அதான் சொல்லிட்டீங்களே ஸ்ட்ரெய்ட்டா கதைக்கு வாங்க என்றேன்... 

சாளுக்கிய மன்னனால் உணவுண்ணும் சத்திரத்தில் அவமானப்படுத்தப்பட்ட சாணக்கியன் சாதாரண இளைஞனை தயார் செய்து உன்னை வென்று காட்டுகிறேன் என்று சபதமிட்டு வெளியேறினான். அவன் கண்டுபிடித்த இளைஞன் தான் சந்திர குப்தன். 

ஆரம்பத்தில் மிகப்பெரிய நந்த வம்ச அரசனை எதிர்க்க பல முறை படை திரட்டி நந்தனின் தலைநகரான பாடலி புத்திரத்தில் போரிட்டும் நந்த மன்னனின் பெரும் படை முன்னே தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி ஒளிந்தனர் சந்தைரகுபதனௌம் , சாணக்கியனும்.

அப்படி ஒருநாள் போரில் ஓடி தாக்கு பிடிக்க முடியாமல் ஓடி ஒரு கிராமத்தில் தஞ்சம் புகுந்த சாணக்கியனும் , சந்திரகுப்தனும் பசியால் வாடி ஒரு மூதாட்டி ஆப்பம் சுட்டு விற்பனை செய்யும் இடத்திற்கு சென்று ஆப்பத்தை வாங்கி உண்ண துவங்கினர்.

கொலைப்பசியில் இருந்த சந்திர குப்தன் சூடான ஆப்பத்தின் நடுப்பகுதியில் பிட்டு சாப்பிட முயல சூடான ஆப்பத்தின் நடுப்பகுதி வெப்பம் தாளாமல் ஐயோ என்று கையை உதறினான். அப்போது ஆப்பம் சுடும் மூதாட்டி வந்தவர்கள் சந்திர குப்தன் , சாணக்கியன் என்று அறியாமல் ,”” என்னப்பா , நீயும் அந்த சந்திர குப்தன் , சாணக்கியன் போலவே புத்தி கெட்டு இருக்கிறாய். ஆப்பத்தின் கொதிக்கும் நடுப்பகுதியை யாராவது முதலில் சாப்பிட முயல்வார்களா ? 

ஓரத்தை மெதுவாக பிட்டு சாப்பிட்டு வந்தால் , தானாக நடுப்பகுதி ஆறிவிட போகிறது அப்புறம் எளிதாக சாப்பிடலாமே ”” என்று கூற , சட்டென்று விழித்துகொண்ட சாணக்கியன் ”” பாட்டி அது சரி இதற்கு ஏன் சாணக்கியனையும் சந்திரகுப்தனையும் ஒப்பிடுகிறாய் “” என்று கேட்க , ”” அதுவா அவர்கள் இப்படித்தான் படை திரட்டி திரட்டி தலைநகரை தாக்கி தோல்வி அடைந்து ஓடுகிறார்கள். அதைவிட சுத்து பத்து சிறு சிறு நகரங்களை தாக்கி கைப்பற்றினால் தலைநகர் தானாக வீழப்போகிறது ”” என்றாராம்.

இது போதாதா சாணக்கியனுக்கு பாட்டி சொன்ன அறிவுரையை கடை பிடிக்க ஒவ்வொரு ஊராய் பிடிக்க பாடலிபுத்திரம் இறுதியில் வீழ்ந்தது. அது போல் சசிகலா அணியினர் கட்சி , ஆட்சி என்ற மிகப்பெரிய வலுவான அமைப்புடன் இருக்க இவர் நேரடியாக பெரிய மோதலில் ஈடுபடாமல் மெதுவாக கட்சி அணிகளை திரட்டி வருகிறார்.

இதனால் கடைசியில் மொத்தமாக கட்சியின் தலைமை பதவியும் கூடவே ஆட்சியும் வந்துவிடும் இதுதான் ஆப்பக்கதை எப்படி இருக்கு என்றார் அந்த பெரியவர்.

அய்யா ஆப்பகார ஆயா சாணக்கியன் கண்ணை திறந்தார் நீங்க என் கண்ணை திறந்துவிட்டீர்கள் , ஆமா இதில் யார் சாணக்கியன் , யார் சந்திர குப்தன் என்று கேட்டேன். அதை வாசகர்கள் தீர்மானிப்பார்கள் நீ நடையை கட்டு என்றார் பெரியவர். அதுவும் சரி என்று நகர்ந்தேன்.