அதிமுக சார்பாக போட்டியிடும் ராஜ்ய சபா வேட்பாளர் யார்..? ஓபிஎஸ்-ஈபிஎஸ் அவரச ஆலோசனை
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10ல் தேர்தல்
நாடு முழுவதும் காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கு வருகிற ஜூன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், அ.தி.மு.க.வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழத்தில் உள்ள கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதன் படி திமுக சார்பாக 4 பேரையும் அதிமுக சார்பாக 2 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்தநிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் பெயரை முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுக பட்டியல் வெளியீடு
இதில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக திரு. தஞ்சை சு. கல்யாணசுந்தரம், .திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், திரு. இரா. கிரிராஜன், ஆகியோர் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக ஆலோசிக்கபடவுள்ளது.
அதிமுகவில் யார் போட்டி- ஆலோசனை
அதிமுக சார்பாக 2 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ள நிலையில், 400 பேர் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, செம்மலை, சிவி சண்முகம், ராஜ்சத்யன், தேனி மாவட்ட செயலாளர் சையது கான், தமிழ் மகன் உசேன் உள்ளிட்டவர்களும் வாய்ப்பு கேட்பதாக கூறப்படுகிறது. இதில் யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து இன்று மாலை அதிமுக தலைமை முடிவு செய்கிறது. தென் மாவட்டங்களில் அதிமுக படு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் மீண்டும் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் தென் மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளுக்கு ராஜ்யசபா பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே ஓபிஎஸ்- ஈபிஎஸ் யாருக்கு வாய்ப்பு வழங்கப்போகிறார்கள் என்பது இன்று மாலை தெரியவரும் என கூறப்படுகிறது.