ஆளுநருக்கு எதிராக திமுக கருப்புக்கொடி... விருதுநகரில் பரபரப்பு... கைது...
விருதுநகருக்கு சென்றுள்ள ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விருதுநகர் மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார். இன்று மதியம் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார்.
தேசபந்து மைதானத்தில், நடைபெறும் உணவு பொருள் கண்காட்சியில் கலந்து கொள்ளும் அவர் அங்கு துப்புறவு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளார். மேலும், மத்திய அரசின் நலத்திட்ட உதவிகள் உரியமுறையில் மக்களுக்கு சென்றடைகிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
மதியம் 2 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற உள்ளார். இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வருகைக்கு, திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் அவருக்கு கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கபாண்டியன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர். போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வந்தாலும், எந்தவித இடையூறும் இல்லாமல் ஆளுநர் தன் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.