இடைத்தேர்தல் வேட்பாளர்களுக்கும் மட்டும் செம கவனிப்பு! அதிர்ச்சியில் தினகரன் கட்சியின் எம்பி வேட்பாளர்கள்!
இடைத் தேர்தல் வேட்பாளர்களை மட்டும் தினகரன் கவனித்து உள்ளதாகவும் எம்பி வேட்பாளர்களை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவரது கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்துள்ளது.
இடைத் தேர்தல் வேட்பாளர்களை மட்டும் தினகரன் கவனித்து உள்ளதாகவும் எம்பி வேட்பாளர்களை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் அவரது கட்சிக்குள்ளேயே சலசலப்பு எழுந்துள்ளது.
40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தினகரன் கட்சி களமிறங்கியுள்ளது. தற்போதைய சூழலில் திமுக அதிமுகவிற்கு அடுத்து தினகரன் கட்சி தான் அரசியல் நோக்கர்களால் கவனிக்கப்படும் ஒரு நிலையில் உள்ளது. இதனால் தினகரன் கட்சி சார்பில் போட்டியிட ஏராளமானோர் விரும்பினார். இதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்து வெளியிட்டு தற்போது தினகரன் சூறாவளி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.
இந்த நிலையில் வேட்பாளர்களாக இருக்கும் அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அது தேர்தல் தொகையில் கணிசமான தொகையை தினகரன் பார்த்துக் கொள்வார் என்பது தான். மேலும் கட்சி சார்பில் ஒரு ஐந்து கோடி ரூபாய் வரை வேட்பாளர்களுக்கு கொடுக்கப்படும் என்கிற ஒரு பேச்சும் ஏற்கனவே இருந்தது. இதனை நம்பித்தான் பலரும் தேர்தலில் போட்டியிட தினகரனிடம் விருப்பம் தெரிவித்தனர்.
ஆனால் பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கும் தினகரன் தேர்தல் செலவுகளை வேட்பாளர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் கொடுப்பதற்கு தன்னிடம் ஏதும் இல்லை என்கிற ரீதியில் இதனால் வரை பேசி வந்ததாகச் சொல்லப் பட்டது. இந்த நிலையில் தினகரன் கட்சி சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களுக்கு மற்றும் கொடுக்க வேண்டியதை கொடுத்து விட்டதாக ஒரு தகவல் பறந்து கொண்டிருக்கிறது.
இப்படி அனுப்பி வைக்கப்பட்ட பணம்தான் அரூரில் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியதாகவும் சொல்கிறார்கள். இதனை அறிந்து தான் எம்பி தொகுதிக்கு போட்டியிடும் தினகரன் கட்சி வேட்பாளர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். 18 தொகுதிகளில் மட்டும் கவனம் செலுத்துவதாக இருந்தால் எதற்காக 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதாக சொல்கிறார்கள்.
ஆனால் தினகரன் தரப்போ 40 தொகுதிகளுக்கும் கொடுக்கும் அளவிற்கு தற்போதைய சூழலில் ஒன்றும் இல்லை எனவும் என்றும் அதனால் இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைத்து விடக்கூடாது என்பதற்காகவே அங்கு மட்டும் முடிந்த அளவிற்கு செலவு செய்ய உதவுவதாகவும் பதில் அளித்து வருவதாக பேசப்படுகிறது.