ஆன்லைனில் பணம் செலுத்தி மது வாங்கும் திட்டம் …. அசத்தும் டாஸ்மாக் !!
தமிழ்நாடு டாஸ்மாக்' நிறுவனம், 'மொபைல் ஆப்' வாயிலாக, மது வகைகளுக்கு, பணம் செலுத்தும் வசதியை துவக்கி உள்ளது. இத்திட்டம் குடிமகன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழக அரசின், டாஸ்மாக் மது கடைகளில், சுகாதார சீர்கேடு, அதிக கூட்டம் இருப்பதால், தனிமை விரும்பிகள், மது வாங்க சிரமப்படுகின்றனர். இதனைப் போக்கும் வகையில் வணிக வளாகங்களில், நவீன மது கடைகளை, டாஸ்மாக் நிறுவனம் தொடங்கியுள்ளது..
அவை, ஏதோ ஒரு மூலையில் இருப்பதாலும், அங்கும், விரும்பிய மது கிடைக்காததாலும், குடிமகன்களின் சிரமம் தீர்ந்தபாடில்லை. அதனால், எந்த இடத்தில் இருந்தும், விரும்பிய மது வகைகளை,ஆர்டர் செய்ய, 'மொபைல் ஆப்' சேவையை, டாஸ்மாக் துவக்கியுள்ளது.
டாஸ்மாக்கின் இந்த சேவையை பெறுவது எப்படி என்றும் இந்நிறுவனம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
மொபைல் போனில், 'கூகுள், பிளே ஸ்டோர்' பகுதியில் இருந்து, 'எச்.ஐ.பி.பி.ஏ.ஆர்.,' என்ற ஆப்பை, பதிவிறக்கம் செய்ய வேண்டும்
பின், மொபைல் போன் எண், 'இ - மெயில்' முகவரி பதிவிட வேண்டும்; வாடிக்கையாளர் பெயர், பாலினம், பிறந்த தேதி குறிப்பிட வேண்டும்.
விரும்பிய ரகசிய எண்ணை பதிவிட வேண்டும்.
ஆதார்' உட்பட அதில் கேட்கப்படும் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும்.
ஆட் மணி' என்ற பகுதியில், விரும்பிய பணத்தை, 'லோட்' செய்ய வேண்டும். பின், 'குயிக் பே' என்ற பகுதியில், மது வகைக்கு பணம் செலுத்தலாம்.
அந்த பணி முடிந்தும், 'கியுஆர் கோடு' வரும். அதை, ஊழியரிடம் காட்டினால், அவர் தன்னிடம் உள்ள மொபைல் போனில், அதை, 'ஸ்கேன்' செய்த பின், மது வகைகளை தருவார்.