On Saturday only Rs 8 crore was collected
தமிழக அரசு பேருந்து கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை மட்டும், கூடுதலாக ரூ.8 கோடி வசூலாகி உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் பேருந்து கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பேருந்து கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரி போராட்டம் நடத்தப்போவதாகவும் திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், மாணவ-மாணவிகளும் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை அன்று பேருந்துகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் 20 ஆம் தேதி மட்டும் ரூ.8 கோடி கூடுதலாக வசூலாகி உள்ளது. இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 22,509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. டீசல் விலை உயர்வு, தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட காரணங்களாலும் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
இதனால் பேருந்துகளை முறையாக இயக்குவதற்கு தேவையான வருவாயைக்கூட அரசு போக்குவரத்து கழகங்களால் ஈட்ட முடியவில்லை. மேலும் பேருந்துகளை சிறப்பாக பராமரித்து இயக்குவதிலும் தொடர்ந்து இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில் பேருந்து கட்டண உயர்வை அடுத்து, அரசு போக்குவரத்து கழகங்களில் தினமும் சராசரியாக ரூ.20 கோடி வசூலாகிறது. வருவாய்க்கும், செலவுக்கும் உள்ள இடைவெளி நாளொன்றுக்கு ரூ.9 கோடியாக இருந்தது. கட்டண உயர்வுக்குப் பிறகு, கடந்த 20 ஆம் தேதி மொத்த வசூல் 28 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கட்டண உயர்வால் வசூல் தொகை ரூ.8 கோடி அதிகரித்துள்ளது.
கட்டண உயர்வால் கிடைத்த உண்மையான வசூல் தொகை எவ்வளவு என்பது ஒரு வாரத்துக்குப் பிறகே தெரிய வரும் என்றும் அவர்கள் கூறினர். மேலும், சனி - ஞாயிறு விடுமுறையைத் தொடர்ந்து அனைத்து அலுவலகங்களும் இன்று திறக்கப்படுகின்றன. அதனால், வசூல் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
