அப்பாவை ரொம்ப மிஸ் பண்றேன்.! மன்னிக்க கற்றுக்கொடுத்தவர்.. உருகிய ராகுல் காந்தி
Rajiv Gandhi : 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்த ராஜிவ் காந்தி, மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில் திட்டமிட்டு தற்கொலைப்படை தாக்குதல் மூலம் படுகொலை செய்யப்பட்டார்.
ராஜிவ் காந்தி மரணம் :
இந்த சம்பவம் இந்தியா உட்பட உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடைபெற்று இன்றுடன் 31ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இவ்வழக்கை கடந்த செவ்வாய்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது.
பேரறிவாளன் விடுதலை :
உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டும் சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தது. அதுமட்டுமின்றி போராட்டமும் தமிழகம் முழுவதும் நடத்தியது.
இன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு நாள். டெல்லியில் உள்ள வீர் பூமியில் காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச் செயலாளார் பிரியங்கா காந்தி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ப. சிதம்பரம் மற்றும் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று ராகுல் காந்தி ட்விட்டரில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
என் தந்தை - ராஜிவ் காந்தி :
அதில், 'என்றென்றும் எங்கள் எங்கள் இதயங்களில்' என்ற சிறிய வீடியோவுடன் பதிவிட்டிருந்த அந்த ட்வீட்டில், ‘என் தந்தை ஓர் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அவரின் கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.அவர் கனிவானவர் மற்றும் இரக்க குணம் உடையவர். அதுமட்டுமல்லாமல் எனக்கும், பிரியங்காவுக்கும் அற்புதமான தந்தை. எனக்கும், பிரியங்காவுக்கும் மன்னிக்கக் கற்றுக்கொடுத்தவர் என் தந்தை. என் தந்தையை நான் ரொம்ப மிஸ் பண்றேன். நாங்கள் ஒன்றாக இருந்த நேரத்தை அன்புடன் நினைத்துப்பார்க்கிறேன்' என்று ராகுல்காந்தி பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : மதுபானங்களின் விலை அதிரடி உயர்வு.! குவாட்டர் ரூ.20..பீர் ரூ.10 குடிமகன்கள் ஷாக் !!