Omicron:அடி தூள்.. ஓமைக்ரானை 2 மணி நேரத்தில் கண்டு பிடிக்கும் கருவி.. உலக நாடுகளை தெறிக்கவிட்ட இந்தியா.
இந்தியாவில் இதுவரை 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இது பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையத்திலேயே சோதனை உட்படுத்தப்படுகின்றனர்.
ஓமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் ஒட்டுமொத்த உலகமும் கவலை அடைந்துள்ள நிலையில் அந்த வைரஸ் தொற்றை இரண்டு மணிநேரத்தில் கண்டறிவதற்கான கருவியை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கும் நம்பிக்கை அளிக்கும் செய்தியாக உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. 150க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை இலட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசியால் மட்டுமே இந்த வைரஸை தடுக்க முடியும் என அறிவித்த விஞ்ஞானிகள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டதன் விளைவாக பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவை பொறுத்த வரையில் கோவேக்சின், கோவிஷீல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கி எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த வைரஸ் தற்போதைய உருமாறிய ஓமைக்ரானாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே டெல்டா வகை வைரசாக உருமாறிய நிலையில் தற்போது அது பிறழ்வு அடைந்த ஒமைக்ரானாக உருவெடுத்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என உலக நாடுகள் அஞ்சுகின்றன. ஓமைக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வகையை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரியது வகை வைரஸ் என பட்டியலிட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் தென் ஆப்பிரிக்கா உடனான தொடர்பை துண்டித்துக் கொண்டுள்ளன. அந்நாட்டிற்கு விமானப் போக்குவரத்துகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. எனவே இதுகுறித்து எச்சரித்துள்ள உலக சுகாதார தலைமை ஆராய்ச்சியாளர் டாக்டர் சௌமியா சாமிநாதன் மைக்ரேன் என்ற உருமாறிய கொரோனா உலகநாடுகளுக்கு மிகப்பெரும் சவாலான ஒன்றாக இருக்கலாம், மீண்டும் இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு முறைகளை நாம் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை தான் இந்த வைரஸ், இது மிக வேகமாக பரவக்கூடியது, வேகமாக பரவும் பட்சத்தில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஒவ்வொருவரும் மாஸ் கட்டாயம் அணிய வேண்டும்,
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களுக்கும் இது ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வைரஸை முழுமையாக நாம் மாஸ்க், சமூக இடைவெளி மூலம் தடுக்க முடியும். பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் இதை நாம் தடுக்க முடியும். இந்த ஓமைக்ரான் டெல்டா வகையை காட்டிலும் வேகமாக பரவும் திறன் கொண்டதாக இருக்கலாம். இதுகுறித்து வரும் காலங்கள் நமக்கு தெளிவாக தெரியவரும். அதற்கான சோதனைகள் வேகமாக நடந்து வருகிறது என அவர் எச்சரித்துள்ளார். இந்நிலையில் இந்த வகை வைரஸ் தீவிர தன்மை கொண்டது என்பதற்கான எந்த சான்றுகளும் கண்டறியப்படவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்துள்ளனர். இது சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த உருமாறி கொரோனா வகையே உலக சுகாதார அமைப்பு கவலைக்குரியதாக பட்டியலிட்டுள்ளது இது தனது புரத ஸ்பைக்குகளில் 30க்கும் மேற்பட்ட மாறுபாடுகளை கொண்டிருப்பதால் இது அதிக ஆபத்தாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் இது போன்ற மாறுதல்கள் இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருபு வகை வைரஸ் தற்போது 38 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரை 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இது பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகள் விமான நிலையத்திலேயே சோதனை உட்படுத்தப்படுகின்றனர். யாருக்காவது ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டு ஓமைக்ரான் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. இதற்கு பல மணி நேரம் ஆகிறது, இறுதி முடிவு கிடைக்க 36 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதே நேரத்தில் ஓமைக்ரான் மாறுபாட்டை கண்டறிய முழு மரபணு வரிசை முறைக்கு 4 முதல் 5 நாட்கள் வரை தேவைப்படுகிறது. இந்நிலையில் இதை விரைவாக கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அதன் விளைவாக வெறும் 2 மணிநேரத்தில் இந்த வைரஸை கண்டுபிடிக்கும் பரிசோதனை கருவி ஒன்றை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக உறுப்பினர்கள் உருவாக்கியுள்ளனர்.
கருவியை உருவாக்கிய விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை வகித்த வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிராந்தியம் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த மருத்துவர் விஸ்வ ஜோதி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் பிராந்திய அரசியலில் இணைந்து ஓமைக்ரான் மாறுபட்டை கண்டறிவதற்கான புதிய பகுப்பாய்வு அடிப்படையில் பரிசோதனை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓமைக்கிரான் இருக்கிறதா? இல்லையா? என்பதை 2 மணி நேரத்தில் கண்டறிய முடியும் ஓமைக்ரான் ஸ்பைக் புரதம் வெவ்வேறு பகுப்பாய்வுகளாக பரிசோதனைகளின் மூலம் சோதிக்கப்பட்டது. இந்த கருவி நூறு சதவீதம் துல்லியமானது என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த தகவல் இந்திய மருத்துவ ஆராய்ச்சியின் அடுத்த படிநிலையாக கருதப்படுவதுடன், இது ஒட்டுமொத்த நாட்டிற்கும் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது குறிப்பிடதக்கது.