Omicron: ஒமிக்ரான் வைரஸ்.. தமிழகத்தில் உஷார்படுத்தப்பட்ட அனைத்து விமான நிலையங்கள்.. மா.சு. அதிரடி..!
தமிழகத்தில் 80 லட்சத்து 50 ஆயிரம் பேர் 2ம் தவணை செலுத்தாமல் உள்ளனர். ஓமிக்ரானை தடுக்க தடுப்பூசி கட்டாயம்.ஓமிக்ரான் தொற்றை கண்டறிவதற்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. ஓமிக்ரான் தொற்றை ஆர்டிபிசுஆர் மூலமே கண்டறியலாம் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.
தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணாநகர் அரசு புறநகர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜனை உற்பத்தி நிலையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தனியார் பங்களிப்பு நிதி சார்பில் ரெனால்ட் நிசான் நிறுவனம் 5 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்க முன்வந்து ஏற்கனவே 1 கோடி வழங்கியது. தற்போது எஞ்சிய 4 கோடி மதிப்பில் அண்ணா நகர் , கலைஞர் நகர் , தண்டையார்பேட்டை , கிருஷ்ணகிரி, திருப்பூர் திருவள்ளூர் , ராமநாதபுரம் , கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை அமைத்து வருகின்றனர்.
அண்ணாநகர் மருத்துவமனையில் தற்போது திறக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூலம் 100 தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்ய முடியும். கடந்த ஆட்சியில் 220 அளவு ஆக்சிஜன் கொள்கலனே இருந்தது. திமுக ஆட்சி அமைந்தவுடன் 744.67 கிலோ லிட்டர் கொள்கலன் கொண்ட அமைப்புகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிரதமர் நிதியின் மூலம் 70 ஆக்சிஜன் ஆலை, தனியார் நிறுவன பங்களிப்பு மூலம் 77, தனியார் மருத்துமனையில் 61 இடங்களில், ரயில்வே மருத்துவமனையில் 4 இடத்தில், என்எல்சி 10 என மொத்தம் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நெடுஞ்சாலையில் உள்ள ஏதேனும் ஒரு தனியார் மருத்துவமனையில் 15 நாட்களில் ' இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கப்படும். இத்திட்டம்
609 மருத்துவமனையில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டம் மூலம் தமிழக எல்லையில் உள்ள சாலையில் விபத்து ஏற்பட்டால், 205 அரசு, 404 தனியார் மருத்துவமனையில் 1 லட்சம் வரை இலவசமாக அரசு செலவளிக்கும்.
ஓமிக்ரான் உள்ள 12 நாடுகளில் இருந்து வருவோருக்கு ஆர்டிபிசிஆர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் நாளை ஆய்வு செய்ய உள்ளோம். கண்காணிப்பின்றி விமான பயணிகள் யாரும் வெளியே வர முடியாது. தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து தமிழகம் வருபவர்கள் அனைவரும் 7 நாள் கண்காணிக்கப்படுகிறார்கள்.
குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வரவில்லை என பொய்யான தகவல் கொடுத்து வருவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தமிழகத்தில் 12 இடங்களில் புதிதாக கொரோனா மரபணு பகுப்பாய்வு கூடம் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 80 லட்சத்து 50 ஆயிரம் பேர் 2ம் தவணை செலுத்தாமல் உள்ளனர். ஓமிக்ரானை தடுக்க தடுப்பூசி கட்டாயம்.ஓமிக்ரான் தொற்றை கண்டறிவதற்கான தெர்மோ டெக்பாத் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. ஓமிக்ரான் தொற்றை ஆர்டிபிசிஆர் மூலமே கண்டறியலாம் என ஐசிஎம்ஆர் கூறியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.