கடந்த 19 ஆண்டுகளாக ‘நாம் தமிழர்’ சீமான் பிடியிலிருந்த வீட்டை மீட்ட மகிழ்ச்சியில் இருக்கும் பெரியவரின் புகைப்படம் ஒன்று முகநூலில் வைரல் ஆகி வருகிறது.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானுக்கு வளசரவாக்கத்தில் பெரிய வீடு ஒன்று உள்ளது. அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அந்த வீட்டை ஆக்கிரமித்து குடியிருந்து வந்ததாகவும், அவ்வீட்டின் உரிமையாளர் வீட்டைக்காலி செய்யச்சொல்லி கோர்ட் படிகளில் ஏறிப் போராடியபோதும் முறைப்படி மீட்க முடியாமல் தவித்து வந்ததாகவும் செய்திகள் நடமாடின. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்பெரும் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், கோர்ட் தீர்ப்பு பெரியவருக்கு சாதகமாக வந்ததை சீமான் வீட்டைக்காலி செய்து வெளியேறிவிட்டதாகவும் அப்பெரியவரின் வக்கீல் முகநூலில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேற்று இரவிலிருந்து வைரல் ஆகிவரும் அப்பதிவு இதோ; ’தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தில் 19 ஆண்டுகாலமாக நுழைய முடியாமல் பரிதவித்த பெரியவரின் நிம்மதி பெருமூச்சை இன்று கண்டேன்.

ஆனந்த கண்ணீரோடு, அவரது இடத்தில் அங்குமிங்கும் நடந்து பார்த்து பரவசம் அடைந்தபோது என் கண்களும் கலங்கியது. 

இத்தனை ஆண்டுகாலமாக 4500000 ற்கு மேல் வாடகை பாக்கி, பல நீதிமன்றங்களில் வழக்கு இழுத்தடிப்பு, உரிமையாளர் உள்ளே நுழைய முடியாதபடியான மிரட்டல். 

ஒருவழியாக இன்று என்னால் அதற்கு தீர்வு கிடைத்தது என நினைக்கும் போது ஒரு வழக்கறிஞராக நான் பெருமிதம் கொள்கிறேன். இத்தனைக்கும் சீமான் அவர் ஒரிஜினல் வாடகைதாரர் அல்ல.

உண்மையான வாடகை தாரரே காலி செய்துவிட்டு சென்ற பிறகு, அவரோடு அவர் உதவி இயக்குனராக தங்கி வாழ்க்கையை ஆரம்பித்த இடத்தை விட்டு இன்றுவரை வெளியேற மறுத்து வந்தார் .

வாடகை நிர்ணயம் செய்த வழக்கில் வெற்றி, வீட்டை காலி செய்ய சொன்ன வழக்கில் வெற்றி, மேல்முறையீடு வழக்கில் வெற்றி, தீர்ப்பை செயல்படுத்தும் வழக்கிலும் இன்று இறுதி வெற்றி. 

இன்று இதுவரை தான் செய்த தவறை உணர்ந்து, மனம்திருந்தி வீட்டின் சாவியை நீதிமன்றம் வழியாக உரிமையாளரிடம் ஒப்படைத்தார் நாம் தமிழர் கட்சி சீமான். 

ஒரு பக்கம் அவர் வாழ்ந்து வளர்ந்த வீட்டை, சட்டத்தின் வழியில் பிடுங்கி, உரிமையாளர் வசம் ஒப்படைக்கும்போது சீமானுக்காக சற்று கவலையுற்றாலும், சொத்தை சம்பாதித்தவரின் முகத்தில் மகிழ்ச்சியை காணும்போது நான் நேர்மையாகவே வழக்கறிஞர் தொழிலை நடத்துகிறேன் என மனம் நிம்மதி அடைகிறேன்.

இதன்மூலம் அதிகாரம் மிக்க தலைவர்களுக்கு நான் விடுக்கும் அன்பான வேண்டுகோள். 

அப்பாவி மக்களின் சொத்துக்களை பறித்து வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல
அன்புடன் :வழக்கறிஞர் V.S.கோபு. இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.