ஓபிஎஸ்க்கு கருணாநிதியை இவ்வளவு பிடிக்குமா? என்னமா புகழ்ந்துட்டாரு...
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாருமே இல்லை" என்றும் புகழாரம் சூட்டியுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, மறைந்த முன்னாள் கருணாநிதிக்கான இரங்கல் குறிப்பை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார். அப்போது பேசிய அவர்: அண்ணாவின் அன்புத் தம்பி கலைஞர் கருணாநிதி. எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர் என பன்முகத்திறன் கொண்டவர் கருணாநிதி. அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் எவரும் இல்லை.
நெருக்கடி காலத்தில் மன உறுதியுடன் திறமையாக செயல்பட்டவர். தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்ட தலைவர்தான் கருணாநிதி. அரசியல் எல்லைகளை கடந்து அவர் மீது புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா நிறைய அன்பு கொண்டிருந்தார்கள். இந்திய அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்தவர் கருணாநிதி. பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர். அதுமட்டுமா சுதந்திர நாளன்று முதல்வர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர்.
பேரறிஞர் அண்ணா மீது பற்றுக்கொண்ட கருணாநிதி, சமூக நீதிக்காக அரும்பணி ஆற்றினார்" இவ்வாறு துணை முதல்வர் புகழாரம் சூட்டிய பன்னீர்செல்வம், "பச்சை தமிழர் பன்னீர்" என முரசொலி நாளிதழில் கருணாநிதி கூறியது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது" நினைவு கூர்ந்து பேசினார்.