nurses will be suspened if they not to back to duty

ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் இன்றைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் 9,990 நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாத சம்பளமாக 7,700 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வாக ஆண்டுக்கு 500 ரூபாய் வீதம் வழங்கப்படுகிறது. மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் நியமிக்கப்பட்ட இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி போராடி வருகிறார்கள்.

சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இந்த நர்ஸ்களுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், நர்ஸ்கள் பணிக்கு வராததால் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நர்சுகளை ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது? என அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.



இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் 90 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்படும் என அமைச்சர் உறுதியளித்ததால், நர்சுகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.

ஆனால் வெறும் வாய்மொழி உத்தரவாதம் மட்டும் அளிக்காமல் அரசாணை எண் 191-ஐ நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் , அரசு பேச்சுவார்த்தையை ஒரு அறையில் நடத்தக் கூடாது. பொது வெளியில் தான் நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டத்தை நர்ஸ்கள் தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைக்குள் நர்ஸ்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அனைவரும் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.