"இந்திய அரசியலமைப்புச் சட்டமே மாற்றியமைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அதிமுகவில் சட்ட அமைப்பை மாற்றி அமைக்க முடியாதா?"
வரக்கூடிய பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் அதிமுகவின் வழிகாட்டியின் படத்தையும் இனி சட்டைப்பையில் வைக்க உள்ளோம் என்று திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பற்றிய சர்ச்சைகள் சூடுபிடித்துள்ள நிலையில், மதுரை மேலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏவுமான ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசுகையில், “அண்மையில் சென்னையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் 4 மணிநேரம் ஆரோக்கியமாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெற்றது. வரும் 23-ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் தொண்டர்களின் ஆலோசனைகளையும் கருத்துகளையும் எடுத்து சொல்லுவோம்.

தமிழகம் மட்டுமல்ல இந்திய துணைகண்டமே இன்று அதிமுகவை திரும்பிப் பார்த்துகொண்டிருக்கிறது. எனவே, பொதுக்குழு கூட்டம் எம்.ஜி.ஆருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அமையும். அதிமுகவை வீழ்த்திவிட்டோம் என்று யாரும் மனப்பால் குடிக்க வேண்டாம். இந்த இயக்கம் மீண்டு எழுந்து வரும். அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவை” என்று ராஜன் செல்லப்பா பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டமே மாற்றியமைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது அதிமுகவில் சட்ட அமைப்பை மாற்றி அமைக்க முடியாதா? அதிமுகவின் இதயமாக இருப்பது பொதுக்குழுதான். அதன் சட்ட அமைப்புகள்தான் மாற்றப்பட உள்ளன.

அதிமுகவினர் தங்களுடைய சட்டைப் பையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்களை வைத்திருக்கிறார்கள். வரக்கூடிய பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்படும் அதிமுகவின் வழிகாட்டியின் படத்தையும் இனி சட்டைப்பையில் வைக்க உள்ளோம்” என்று ராஜன் செல்லப்பா தெரிவித்தார்.
