notice sent to 15 members about jayalalitha death ... arumugasamy
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு இது வரை 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், 20 க்கும் மேற்பட்ட புகார் கடிதங்களைப் பெற்றுள்ளதாகவும் நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஓபிஎஸ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அதிமுக தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி அரசுக்கு 3 மாதத்தில் அறிக்கை அளிப்பார் என்று கடந்த மாதம் 25ம் தேதி உத்தரவிட்டார்.

முதலமைச்சர் உத்தரவிட்டதை தொடர்ந்து விசாரணை கமிஷன் நீதிபதி ஆறுமுகசாமி, சென்னை, எழிலகத்தில் உள்ள கலசமஹாலில் அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் இன்று போயஸ் கார்டனில் தனது விசாரணையைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விசாரணை ஆணைய தலைவரும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஆறுமுகசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு, விசாரணை ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்துக்கு 20க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளன என்றும் தெரிவித்தார்.
யார் யாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்ற தகவல் வெளியாகாத நிலையில், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது போயஸ் கார்டனில் இருந்தவர்கள் உட்பட 15 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
