வேதாந்தா நிறுனத்தை ஓட ஓட துரத்தி விரட்டும் ஒடிசா … ஆவேச பழங்குடியின மக்கள் !!
வேதாந்தா நிறுவனத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மக்கள் கடும் போராட்டம் நடத்தி மூட வைத்தார்களோ அதைப்போன்று ஒடிசாவில் இயங்கி வரும் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்று பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் வேதாந்தா நிறுவனம், தூத்துக்குடியில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டெர்லைட் ஆலையை தொடங்கியது. அப்போது முதலே அந்த ஆலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் கடந்த 100 நாட்களில்தான் போராட்டம் வீரியம் பெற்று எழுந்தது. 100 ஆவது நாளில் நடைபெற்ற போராட்டத்தின்போது அப்பாவிப் பொது மக்கள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மாசு கட்டுக்கட்டுப்பாட்டு வாரியம் அந்நிறுவனத்துக்கு வழங்கிய நிலம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா மேற்கொண்ட முயற்சியை கடந்த ஆண்டு டோங்கரியா கோண்டு பழங்குடியினர் மற்றும் சுற்றுசூழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
தற்போது இந்த பழங்குடியின மக்கள் லாங்கிரியில் உள்ள அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய வேதாந்தா முயற்சி செய்து வரும் நிலையில் அங்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனை மூட வலியுறுத்தி கடந்த வாரம் உள்ளூர் மக்கள் மிகப் பெரிய பேரணியை நடத்தினர்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உண்டாக்கும் இந்த அலுமினியத் தொழிற்சாலையை விரட்டியே தீருவது என அவர்கள் முடிவெடுத்துள்ளதாக பழங்குடியின தலைவர் லாடோ சிகாகா பேசியுள்ளார்.
மேலும் தமிழகத்தில் வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டம் தங்களுக்கு உத்வேகத்தைக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.