இவங்க மருது பிரதர்ஸ்? எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது... அடுத்த சர்ச்சைக்கு அடிகள்நாட்டிய செல்லூர் ராஜு!
இருவரும் மருது சகோதரர்களைப் போன்றவர்கள், இவர்களை எந்தக் காலத்திலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸைப் பிரிக்க முடியாது.” என்று சர்ச்சை அமைச்சர் அமைச்சர் செல்லூர் ராஜு அடுத்த சர்ச்சைக்கு அடித்தளம் போட்டுள்ளார்.
சமீப காலமாகவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் காண முடிவதில்லை. கொடைக்கானலில் மலர்க் கண்காட்சி நடைபெற்றால் தவறாமல் கலந்துகொள்ளும் ஓபிஎஸ், இந்த ஆண்டு பங்கேற்கவில்லை.
முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் சரியான உறவில்லை என்று கூறப்பட்டுவந்த நிலையில், கடந்த 20 ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வம், தனக்கும் முதல்வருக்கும் எந்தப் பிணக்கும் இல்லை, எங்கள் ஒற்றுமை வலிமையாக உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை மாதவரத்தில் விவசாயக் கூட்டுறவுப் பணியாளர் பயிற்சி நிறுவனத்தில் கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, “எந்தக் காலத்திலும் ஓபிஎஸ் - ஈபிஎஸ்ஸைப் பிரிக்க முடியாது. இருவரும் மருது சகோதரர்களைப் போன்றவர்கள். சிண்டு முடிய நினைப்பவர்களின் கனவு பலிக்காது” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே ரஜினியை கலாய்ப்பதாக நினைத்து அவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது, வேண்டும்னா காரைக்குடி ஆச்சி என்று கூறி சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜு, தற்போது ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களோடு ஒப்பிட்டு பேசியுள்ளது அடுத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.